
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் மயிலை சிட்டி சென்டருக்குச் சுற்றுலா சென்றிருந்த போது வாங்கிய ஒரு புத்தகம் தான் 'ஒரு யோகியின் சுயசரிதம்'. பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை வரலாறு இந்நூல்.
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததில் இருந்து இது போன்ற இளந்துறவிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதில் ஆர்வம் இருந்து வந்தது. இந்நூல் யோகானந்தராலேயே இயற்றப்பட்டு இருப்பதால் அவருடனே வாழ்ந்து நாமும் வளர்வதாக உணர முடிகின்றது.
மஹா அவதார் பாபாஜி பற்றி முதன்முதலில் எழுத்து வடிவில் இவர் தான் முதலில் வெளிக் கொணர்ந்தவர் என்கின்றனர். பாபாஜி, லாஹிரி மஹாஸயர், குரு யுக்தேஸ்வரர் மற்றும் பல சாதுக்களையும் சன்னியாசிகளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்களது வாழ்வின் அற்புதங்கள் நம்மை திகைப்பின் எல்லைக்குள் இழுத்துச் செல்கின்றன.
வாழ்வின் நிலை, இறப்பிற்குப் பிறகான வாழ்க்கை, இந்த வாழ்வின் அர்த்தம் என்ன, எதற்காக நாம் இங்கு வந்திருக்கின்றோம் என்ற ஆதிகால கேள்விகளுக்கு எல்லாம் யோகானந்தர் எளிமையாக கூறும் பதில்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
ரஜினி அனைவர்க்கும் படிக்க சிபாரிசு செய்யும் இரண்டு புத்தகங்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று The Himalayan Masters.
மேலும் இந்நூலைப் பற்றிய மதிப்புரை எழுத என்னால் இயலாது.
நீங்களே படித்துப் பாருங்களேன்.
*****
புத்தகம் : ஒரு யோகியின் சுயசரிதம்.
புத்தக வகை : வாழ்வுக் கதை.
ஆசிரியர் : பரமஹம்ஸ யோகானந்தர்.
கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.
பதிப்பகம் : யோகதா சத்சங்க இயக்கம், ராஞ்சி.
இணையம் : Autobiography of a Yogi .
Friday, March 28, 2008
ஒரு யோகியின் சுயசரிதம்.
Wednesday, January 16, 2008
ஷிட்னி ஷெல்ட்டன்
இவர் எழுதிய நாவல்களில் உலகப் புகழ் பெற்றது...
1. மாஸ்டர் ஒப் த கேம்
2. ரேஜ் ஒப் ஏன்ஞல்ஸ்
3. தி அதர் சைட் ஓஃப் த மிட் நைட்
இவர் ஒரு ஜூத இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தாயார் ருசிய யூத இனத்தையும் தந்தை ஜேர்மன் ஜூத இனத்தையும் சேர்ந்தவர்கள்.
உலக யுத்தம் II ல் விமான ஓட்டியாகப் பணியாற்றினார் என்பதையும் குறிப்பிட வேண்டும். Dooms day conspiracy எனும் நாவலில் இதன் தாக்கத்தைக் காணலாம்.
The Naked Face எனும் முதலாவது நாவலை 1969 ல் எழுதினார். அடுத்த நாவல் The Other Side of Midnight விற்பனையில் சாதனை படைத்ததோடு, பல விருதுகளையும் பெற்றது.
இவர் நாவல்கள் ஒரு சாதூரியமான ஒரு பெண் பாத்திரத்தை நோக்கியே அல்லது சுற்றியே நடக்கும். ரமணிச்சந்திரனைப் போல இவருக்கும் பெண் வாசகிகளே அதிகம். திரைப்படங்களில் இல்லாத சுகந்திரம் நாவல் எழுதுவதில் கிடைப்பதால், நாவல் எழுதுவதையே தான் விரும்புவதாக கூறியிருந்தார்.
2005 ல் வெளி வந்த The other side of me, என்ற சுயசரித்தின்படி 17ம் வயதில் தற்கொலை முயற்சி செய்த போதும் அவரது தந்தையால் காப்பற்றப்பட்டாராம்.
இத்தனை சிறப்பான எழுத்தாளர் 2007ல் நியூமோனியாவால் பாதிக்கப்பட்டு இறையடி சேர்ந்தார்.
இவர் எழுதியுள்ள நாவல்கள்...
• The Naked Face (1970)
• The Other Side of Midnight (1973)
• A Stranger in the Mirror (1976)
• Bloodline (1977)
• Rage of Angels (1980)
• Master of the Game (1982) – வாசித்தாகி விட்டது
• If Tomorrow Comes (1985)
• Windmills of the Gods (1987)
• The Sands of Time (1988) – வாசித்தாகி விட்டது
• Memories of Midnight (1990)
• The Doomsday Conspiracy (1991) – வாசித்தாகி விட்டது
• The Stars Shine Down (1992)
• Nothing Lasts Forever (1994)
• Morning, Noon and Night (1995) – புத்தகம் வாங்கியாச்சு, ஆரம்ப்பிக்கணும்
• The Best Laid Plans (1997)
• Tell Me Your Dreams (1998)
• The Sky is Falling (2001)
• Are You Afraid of the Dark? (2004)
• Catoplus Terror
Saturday, January 05, 2008
ஜேஜே சில குறிப்புகள்
நேற்றைக்கு ஜேஜே சில குறிப்புகள் நூலை இன்னொரு முறை முழுதாகப் படித்து முடித்து விட்டேன். நண்பர் அதியமான் அந்தப் புத்தகத்தைக் கொடுத்து கண்டிப்பாகப் படியுங்கள் என்று சொன்ன போது, சில பக்கங்கள் படித்து விட்டு மூடி வைத்து விட்டேன். 'அதைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு சில சிறப்புத் தகுதிகள் தேவை போலிருக்கிறது, எனக்கு இன்னும் அவை இல்லை, அவை கிடைத்து பிறகு படித்துக் கொள்கிறேன்' என்று அவருக்கு மடலும் போட்டு விட்டேன்.
அப்புறம் புளியமரத்தின் கதை என்று நாவலை படிக்க வாய்த்தது. அதன் தாக்கத்தில் சுந்தரராமசாமியின் எழுத்துக்கான தாகம் வந்து விட்டது. ஜேஜே சில குறிப்புகளைப் படிக்க ஆரம்பித்தேன்.
'இது நாவலா, வரலாற்றுக் கட்டுரையா, தத்துவ நூலா, வாழ்க்கை வரலாறா என்று கேட்டால், எதுவுமே இல்லை என்றுதான் சொல்வேன். அப்படி எந்த வரையறைக்கும் உட்படாத ஒரு படைப்பு' என்று டால்ஸ்டாய் போரும் அமைதியும் குறித்து எழுதியிருக்கிறார்.
சுந்தரராமசாமிக்கு மாறுபட்ட பிரச்சனை. நூலின் முகப்பில் A Novel என்று போட்டு, முன்னுரையில், மதிப்புரையில் இது ஒரு நாவல் என்று அடித்துச் சொன்னாலும், படிக்கும் போது நாவல் என்று மனம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
- தன்னிலை ஒருமையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளராக விரும்பும் ஒருவர் சொல்லிச் செல்வதாக அமைவதால், அந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமிதான் என்று உருவகம் எளிதாக வந்து விடுகிறது.
- அறிமுகம் இல்லாத மலையாள இலக்கிய உலகை பின்னணியாகக் கொண்டு பெயர்களையும் இடங்களையும் சொல்லிச் செல்வதால் அவை உண்மை என்றே கொண்டு படித்துப் போக முடிகிறது.
- மலையாள எழுத்தாளர்கள், விமரிசகர்கள் என்று பெயரைக் குறிப்பிடும் போது அடிக்குறிப்பாக அவர்களைப் பற்றிய விளக்கங்களைக் கொடுப்பது உண்மையிலேயே ஒரு வாழ்க்கை வரலாற்றை எழுதுவதாகத்தான் படுகிறது.
இரண்டாவது முறை முழுமையாகப் படிக்கும் போது ஜேஜேயின் குறிப்புகள் என்னுடைய நாட்குறிப்புகள் போல தெரிய ஆரம்பித்தன. ஒரு படைப்பின் வெற்றி அதைப் படிப்பவர் தன்னை அதில் பொருத்திக் கொள்ள முடிவதுதான். இனம், மொழி, நாடு, காலம் வேறுபட்டாலும் மனிதர்கள் மாறுவதில்லை. அடிப்படையில் நாம் எல்லோரும் ஒன்றுபடுகிறோம். அந்த ஒருமைக்கு உருக்கொடுத்து படிப்பவர்களை தனது கதை மாந்தர்களின் உள்ளோடு இணைய வைத்து விடுபவை உயர் படைப்புகள்.
டால்ஸ்டாயின் கெவின் அல்லது பீட்டர், மார்கரெட் மிச்செலின் ஸ்கார்லெட், டிக்கென்சின் டேவிட் காப்பர்பீல்டு என்று காலத்தை வென்ற படைப்புகளில் எல்லாம் கதை என்று தெரிந்தும் கதை மாந்தர்களின் மனதுக்குள் புகுந்து கொள்ள முடியும். அதே சாதனையை இன்னும் முழுமையாக, கதை என்றே சந்தேகிக்க முடியாமல், நம்மை ஜேஜே வுடனும், பாலுவுடனும் ஒன்ற வைத்து விடுகிறார் சுந்தரராமசாமி.
ஜேஜேயின் வாழ்க்கை வரலாற்றை முற்றிலும் சொல்வதாகவும் அமையவில்லை. அங்கொன்று இங்கொன்றுமான தெளித்து செல்லும் விபரங்களிலிருந்து நாம் ஓவியத்தை முழுமைப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். நவீன ஓவியக் கலையில் உருவத்தை முழுமையாகக் காட்ட மாட்டார்கள், சுவைஞர்களின் கற்பனைக்கு முழு இடம் கொடுத்து விடுவார்கள். அப்படி கற்பனை சிறகடித்துப் பறக்க வைக்கும் படைப்பு சுந்தர ராமசாமியினுடையது.
ஜேஜேயின் எழுத்துப் பாணியைக் குறித்து பாலு புலம்புவது. வேட்டை நாயைப் போல தாவித் தாவிப் போகுமாம். உண்மை என்பது வேட்டை நாய், படைப்பு அதன் கால் தடம் போல, நாம் தடத்தைப் பார்க்கும் போது நாய் போய் வெகு நேரம் ஆகியிருக்கும், கால் தடங்களை மட்டும் தடவிக் கொண்டிருந்தால் நாயை கோட்டை விட்டு விடுவோம்.
அதுதான் சுந்தர ராமசாமியில் எழுத்துக் குறிக்கோளோ! தீ என்று எழுதினால் வாசகருக்கு சுட்டு விட வேண்டும் என்று லா சா ராமாமிருதம் சொல்லியிருந்ததாகப் படித்திருக்கிறேன். தனது எழுத்து, படிப்பவரை எப்படிப் பாதிக்க வேண்டும் என்று சுந்தர ராமசாமியும் முனைந்து சிந்தித்திருக்கிறார்.
எங்கள் ஊரில் வாழ்ந்து மறைந்து சுந்தரராமசாமியை சந்திக்காமலேயே முப்பது ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன் நானும். புத்தக வாசிப்பில் பைத்தியமாகத் திரிந்த எனக்கே தமிழின் உன்னதமான படைப்பாளிகளில் ஒருவரை ஒரு சில கிலோமீட்டர் தொலைவுகளுக்குள் இருந்தும் பார்க்க வாய்க்காதது தமிழ் இலக்கிய உலகின் அவலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
Wednesday, October 31, 2007
கி. ராஜநாரயணன் தொகுத்த கு.அழகிரிசாமி சிறுகதைகள்
சென்ற தலைமுறையின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான கு.அழகிரிசாமி எழுதி சிறந்த கதை சொல்லி கி. ராஜநாரயணன் தொகுத்த இப்புத்தகத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட கதைகள் உள்ளன. எளிய நடையில் மனித மணங்களை வெளிச்சமிட்டு காட்டும் இதில் ஒரு சில கதைகள் படித்து பல மாதங்கள் ஆகியும் மனதை விட்டு அகல மறுக்கின்றன, நேசமான பெண்ணின் ஆறுதல் வார்த்தைகளைப்போல. காதலியின் எல்லா உடைகளும் பிடித்திருந்தாலும் அதில் சில எப்பொதும் நம் கண்முன் நிற்கும் அல்லவா? அதுபோல இதில் எனக்கு மிகவும் பிடித்த அய்ந்து கதைகளை குறிப்பிடுகிறேன். இரன்டு பெண்கள் என்னும் கதை ஒரு வாலிபன் அழகில்லாத பெண்ணுடன் பழகும்போது கண்டுகொள்ளாத சமூகம் ஒரு அழகு பெண்ணுடன் பழகும்போது கொதிப்பதை பற்றியது. மகன்களுடன் ஒத்து வராமல் தன் மகன் வயதையொத்த ஒருவருடன் அன்யோன்யமாக இருப்பவர் பொருள் என்று வரும்போது மகனுக்கே என்று எடுக்கும் நிலைப்பாடு பற்றிய கதையும், வசதியான வீட்டில் இருந்து தற்போது கடன் வாங்கும் நிலையில் இருக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை சித்தரிக்கும் கதையும் மறக்க இயலாதவை. அழகான பெண்கள் இருக்கும் வீட்டில் சமையல் வேலைக்கு போகும் ஒரு வாலிபன் அவர்கள் அவனை ஆணாக மதிக்கவில்லை என்று அங்கிருந்து வெளியேறும் கதை நுட்பமாக சித்தரிக்கப்பட்ட ஒன்று. தன் மகளின் காதல் திருமணத்தால் வேறு ஊருக்கு சென்று அங்கு நல்லவர்களாக வாழும் ஒரு குடும்பத்தின் கதை இன்றைய மக்களை பிரதிபலிக்கும் படைப்பு. இவரின் கதைகளை படிக்கும் போது, தேர்வு முடிவுகள் வெளியான நாளுக்கும் பள்ளி துவங்கும் நாளுக்கும் இடைப்பட்ட நேரத்தில் நமக்கு பிடித்த விஷயங்களை பயமில்லா மனநிலையில் செய்து மகிழ்வோமே அந்த உணர்வு கிடைக்கிறது.
ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்"
Monday, October 15, 2007
சித்தர் பூமி சதுரகிரி.
நேற்று மயிலையில் உள்ள சென்னை சிடி சென்டருக்குச் சென்றிருந்தோம். வழமை போல் கால்கள் தாமாகவே லேண்ட்மார்க்குக்கு அழைத்துச் சென்று விட்டன. கொண்டு போயிருந்த பைசா கொஞ்சம் செலவழித்து நான்கு புத்தகங்கள் வாங்கினேன். அவற்றுள் ஒரு புத்தகம் தான் 'சித்தர் பூமி சதுரகிரி'.
பேருந்தில் வரும் போதும், வீடு திரும்பிய பின்னும் அமர்ந்து படித்து முடித்தேன். அதைப் பற்றி சில குறிப்புகள்.
திருவில்லிப்புத்தூரின் அருகில் உள்ள சதுரகிரி ஒரு சித்த பூமி. பதிணெண் சித்தர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் இங்கு சென்று இருக்கிறார்கள். நூலாசிரியர் திரு.கே.ஆர்.சீனிவாச ராகவன் அவர்கள் தம் பயணக் கட்டுரை நூலாக இப் புத்தகத்தை எழுதியுள்ளார்கள். நாமும் கூடவே பயணிப்பது போல் உள்ளது.
மனிதன் கைபடாத வனப் பகுதிகள். சித்தர்கள் இன்னும் அரூபமாக நடமாடும் குகைகள். காட்டு விலங்குகள். பட்டப் பகலிலும் இருள் சூழ்ந்த காட்டுப் பகுதிகள். என்று பல பகுதிகளை தன்னுள் அடக்கியிருக்கும் சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்த சதுரகிரிக்கு ஒருமுறையாவது சென்று வர வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது, இந்நூல்.
ஆன்மீக யாத்திரையாகவோ, மலையேறும் பயணமாகவோ குழுவாக ஒரு வழியறித் துணையுடன் (கைடு) என்று வர அற்புத அனுபவங்கள் கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள :
http://www.sathuragiri.com/index1.html
புத்தகம் : சித்தர் பூமி சதுரகிரி.
புத்தக வகை : ஆன்மீகம், பயணக் கட்டுரை.
ஆசிரியர் : திரு.கே.ஆர்.சீனிவாச ராகவன
கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.
விலை : ரூ.70.
பதிப்பகம் : www.nhm.in
Thursday, September 27, 2007
வயது வந்தவர்களுக்கு மட்டும்...
பாலுணர்வைத் தூண்டும் படங்கள், திரைப்படங்கள், கதைகள். இவை இல்லாத இடம் இருக்கிறதா? அவற்றைப் பற்றிப் பொதுவில் விவாதிப்பதை தவிர்த்து விடுகிறோம்.
- பள்ளிப் பருவத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் அப்படி பலான பத்திரிகைகளை வாங்குவார்கள். அதைத் தள்ளிக் கொண்டு போய்ப் படித்துக் கொள்வோம். நான்காம் தர எழுத்தாளர்களின் கற்பனையில் கதைகளைப் புனைந்திருப்பார்கள்.
- சாண்டில்யனின் கதைகளில் அவரது பாணியில் 'சிருங்கார ரசத்தைப்' புகுத்தியிருப்பார். ராஜேந்திர குமார், புஷ்பா தங்கதுரை போன்றவர்கள் கொஞ்சம் தாராளமாக எழுதுவார்கள். மற்ற பெரும்பான்மை எழுத்தாளர்களின் பாத்திரங்கள் எல்லாம் சாப்பிடுவதைத் தவிர, குளிப்பதைத் தவிர உடல் ரீதியான வேலைகளைச் செய்வதே தெரியாது.
- கல்லூரியில் சேர்ந்த புதிதில் 'ராகிங்' என்ற பெயரில் முதலாண்டு மாணவர்களுக்கு உலகத்தைக் காட்ட மூத்த மாணவர்களின் அட்டகாசங்கள் நடக்கும். அப்படி ஒருவர் அழைத்துச் சென்ற படம், அந்த ஆண்டுகளில் தமிழகமெங்கும் பிரபலமாக ஓடிய ஒரு திரைப்படம். அந்தத் திரைப்படத்தின் இடையிடையே துண்டுகளை ஓட்டுவதுதான் சிறப்பு அம்சம்.
அடுத்தவரின் பாலுணர்வு, சுயஇன்ப நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் போது என்ன தோன்றுகிறது என்று எழுதிய வலைப்பதிவு அலி டேவிசின் வலைக்குறிப்புகள்.
வீடியோ படங்கள் வாடகைக்கு விடும் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அலி டேவிஸ், அந்த வேலையில் சேர்ந்து ஓராண்டு ஆகப்போகிறது என்று உணர்ந்து சோர்வடையும் நாளிலிருந்து குறிப்புகள் தொடங்குகின்றன. வேறு நல்ல வேலை கிடைக்கும் வரை பணத்துக்கு வழி பார்க்க சேர்ந்த வேலை நீண்டு கொண்டே போய் விட்டது.
வீடியோ படங்களில் பாலுணர்வைத் தூண்டும் வீடியோக்களை எடுத்துப் போகின்றவர்களைப் பற்றியே அதிகமாக எழுதியுள்ளார்.
- அத்தகைய படங்களின் இனவெறியை காட்டும், பெண்களைச் சிறுமைப் படுத்தும் தலைப்புகள், அட்டைப் படங்கள், அதைப் பற்றிய அவரது கருத்துக்கள்.
- படங்களை வாடகைக்கு எடுத்துச் செல்பவர்களின் நடவடிக்கைகள்.
- மூன்று படங்களை எடுத்துக் கொண்டு போய், அவற்றைப் பார்த்து முடிக்கும் நேரம் கழிந்ததும் வந்து இன்னும் மூன்று எடுத்துச் செல்பவர்,
- ஆண்டுக்கு ஆயிரக் கணக்கான டாலர்கள் இந்தப் படங்கள் வாடகைக்கு எடுப்பதிலேயே செலவழிப்பவர்,
- உண்மையிலேயே ஆராய்ச்சிப் பணிக்காக எடுத்துச் செல்லும் ஒரே ஒருவர்,
- ஓரிரு டாலர்கள் ஏமாற்றப் பார்க்கும் அல்ப புத்திகள்,
- திருடர்கள்,
- மறைவில் செய்ய வேண்டிய செயல்களை கடையிலேயே செய்பவர்,
- தொலைபேசியில் பேசுவதையே இன்பமாக கொண்ட ஒருவர்,
- கடையில் வேலை பார்ப்பவர்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் கர்மா புள்ளிகள்
இணையத்தில் ஒரு கிளிக்கில் விதவிதமான படங்கள், கதைகள் கொட்டிக் கிடக்கும் சூழலில் அவற்றை அணுகுவதில் இருக்கும் உணர்வுகளை, நடுநிலையாக அலசுகின்றன இந்தப் பதிவுகள்.
Saturday, September 08, 2007
அச்சம் என்பது மடமையடா
முதல் அறிமுகம், எங்கள் ஊர்த் திருவிழாவில் உள்ளூர் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியில். சின்ன வயது என்று நினைவு. கூட வந்த எல்லோரும் வெவ்வேறு இடங்களுக்குப் போய் விட, நகரிலிருந்து கிராமத்துக்கு வந்து ஆரவாரங்களைப் பார்க்கும் மருட்சியுடன். பாதித் தூக்கக் கலக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். இப்படி பின்னிரவில் தன்னிச்சையாக சுற்ற வாய்ப்புக் கிடைப்பது இது போன்ற திருவிழாக் காலங்களில்தான். சாதாரண நாட்களில் இதற்கு முன்பு தூக்கத்தில் இரண்டு ஜாமம் கழிந்திருக்கும்.
ஏதோ ஒரு கடமைக்காக, கட்டாயத்துக்காக தூக்கத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டே. அந்தப் பேருந்து போகும் சாலைக்கு சற்றே ஒதுங்கி போடப்பட்ட மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிவாஜி பாட்டு பாடினால் ஒரு பக்கத்திலிருந்து விசில், எம்ஜிஆர் பாட்டுக்கு இன்னொரு பக்கம் விசில் என்று மச மசவென்று போய்க் கொண்டிருந்தது நிகழ்ச்சி. டிஎம்எஸ் குரலில் பாட ஒருத்தர், எஸ்பிபி குரலுக்கு இன்னொருத்தர், பெண் குரலுக்கு ஒரு பெண்மணி என்று மாற்றி மாற்றிப் பாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போதுதான், வேட்டி கட்டிய அதுவரை கவனத்தை அதிகம் கவராத, விசில் சத்தம் அவ்வளவு வாங்காத வகிடெடுத்துச் சீவிய அண்ணன் ஒலி வாங்கிக்கு அருகில் வந்தார்.
'அச்சம் என்பது மடமையடா' என்று உச்ச குரலில் அலற, சுற்றி இருந்த எல்லா உயிரினங்களும் அரைத்தூக்கத்திலிருந்து விழித்து விட்டன. அடுத்த நான்கு நிமிடங்களுக்கு அந்த இடமே வேறுபாடுகள் மறைந்து ஒரே முகமாகி விட்டது. நிறைய பேர் பாடவும் ஆடவும் ஆரம்பித்திருந்தார்கள்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
இருவர் படத்தில் கண்ணைக் கட்டிக் கொள்ளாதே என்ற பாடலும் கேட்கக் கேட்கச் சலிக்காத ஒன்று. ஏ ஆர் ரகுமான் தனது இசை மாயங்களை எல்லாம் குழைத்து உருவாக்கிய பாடலும், அதற்கான வரிகளும், துள்ளலான குரலும் காற்று மண்டலத்தில் ஒரு துண்டை வெட்டிக் கையில் கொடுத்தது போல உருப் பெற்று விடுகின்றன. இடையில் வரும் மெல்லிசை மெட்டும் பொம்மை போல ஐஸ்வர்யா ராய் ஆடுவதும் ஐஸ்கிரீமின் நடுவில் பாதாம் பருப்பு நிரடுவது போன்ற சுகம்.
